Skip to main content

மாங்கொத்து

வள்ளி கிழவி இதோடு 6 குடம் தண்ணிர் பிடித்து இறைத்து விட்டாள்.

"ஏன் கிழவி இந்த மரத்துக்கு போய் தண்ணி விட்டு என்னத்துக்கு ஆகப் போவுது? நீயும் தினமும் குளத்திலிருந்து இந்த மா மரத்துக்கு தண்ணி ஊத்துற, இந்த மரம் பூக்குதா, காய்குதா? என்றான் சோமு துண்டை உதறிக்கொண்டு.


"அட சோமு! என்ன தான் இருந்தாலும் இந்த மரமும் ஒரு உயிர் தானே டா! நான் ஆசையா வெச்சது, அது என் புள்ளை மாதிரி வளந்திருச்சு. அது பூக்கும் காய்க்கும் ன்னு பலனை எதிர்பாத்தா அதுக்கு சேவகம் செய்ய சொல்லுற?"என்றாள் அவள் போக்கை வாய் சிரிப்புடன்.


சோமு சலித்துக்கொண்டே எழுந்தான். "உன்ன திருத்த முடியுமா கிழவி? சரி சரி நான் வேலைக்கு போறேன். நி உன் மா மரத்தோட பேசிகிட்டே வேலைய பாரு. என்று துண்டை தலையில் முண்டாசு கட்டி கொண்டே சைக்கிளில் அமர்ந்து செல்ல தொடங்கினான்.


அடுக்களையில் சோற்றை போல் அவள் மனமும் பொங்கியது. எவ்வளவோ ஆசையுடன் வைத்த மரம் கன்று அது? எத்தனை வருடம் ஆகி இருக்கும் அந்த பழத்தை சுவைத்து? சாமியார் கொடுத்த அருள் பெற்ற மாங்கனி என்று அந்த கிழவன் கொடுத்தானே! அதன் ருசி தான் என்ன? அதற்க்கு காரைக்கால் அம்மையாரின் கதை வேறு சொன்னனே? அதை போல் இனிக்கிறது என்று சொல்லி சொல்லி உண்டோமே அந்த அன்பு தான் என்ன?


அந்த மாங்கொட்டையை எடுத்து, வெயிலில் காய வைத்து, சுக்காக காய்ந்த பின், அதனை ஒரு சட்டியில் எரு மண்ணை போட்டு புதைத்து, தினமும் நீர் விட்டு, அது முளை வந்த வுடன், வாசலில் குழி அமைத்து, சரளை கற்கள், வண்டல் மண் இட்டு, தட்டி கட்டி ஆடு மாடுகள் வராமல் பாதுகாத்து, அதனுடன் தினமும் பேசி, நம் கதைகளை அதற்க்கு சொல்லி, அழுது, சிரித்து, கோபித்துக்கொள்ள மட்டும் இல்லை, இப்படி பூ பூக்கும், காய்க்கும் என்று வளர்த்தது சுயனலதிர்காகவா? இல்லையே? தோப்பு மரம் போல பலன் தருவதற்கு பாதுகாத்து வளர்த்தது இதற்காகவா? செத்து போன அவள் கணவன் இது தான் நம் முதல் குழந்தை என்று சொன்னதால் இதை குழந்தைபோல இதை பாவித்து அந்த கிழவி காதலித்து வருகிறாள் என்று இவர்களுக்கு புரிவதில்லை.


"வீட்டில இருக்கியா கிழவி? என்று கூவினாள் ராசம்மா.


"என்னடி? என்ன சங்கதி?" என்றாள் உள்ளிருந்த படியே.


"ஒன்னும் இல்ல, நாளைக்கி பண்டிக, என்ன பலகாரம் படைக்க, என்ன முறை செய்யன்னு தெளிஞ்சிகிட்டு போகலாம்னு வந்தேன்."


"அது என்னடி உனக்கு தெரியாத செய்முற எனக்கு தெரிஞ்சிட போவுது?" என்று மடக்கினாள் வள்ளி கிழவி.


"இந்தா! வயசில பெரியவ இருக்க.. நாலு விஷயம் தெரியுமே ன்னு தான் கேட்டேன்.."


"அது என்னடி, எப்பவும் செய்யிற போல செஞ்சிடு, உன் மருமவ தான் ஒத்தாசைக்கு இருக்கால்ல? பொறவு என்ன?"


ஆமாமாம், இருக்கா செக்கு உலக்கை மாதிரி, தின்கிறது தூங்குறது, உனக்கு என்னமா மவராசி பிக்கல் பிடுங்கல் இல்ல என்று குத்தலாக சொன்னாள் ராசம்மா.


வாய் பிடுங்கத்தான் வந்திருக்கிறாள் என்று புரிந்தது அவளுக்கு. "சரி, சரி விஷயத்துக்கு வா" என்றாள்.


"மாவிலை வேணும் அந்த மவராசி கிட்ட பத்து தடவை சொன்னேன், காதுல போட்டுகிட்டே செவிடச்சி மாதிரி உக்காந்துகிட்டு இருந்தா. அது தான் நானே வந்திருக்கேன்."


"எங்க மாவிலை பறிக்க வா?"


அமாம் கிழவி, உன் வீட்டு மா மரத்திலேந்து ரெண்டு கொத்து மாவிலை எடுத்துக்கட்டுமா?"


"அட அதுக்கென்னடி? தாரளமா பரிசிகிட்டு போ" என்று சந்தோசமாக துரட்டி கோல் எடுத்துகொண்டாள்.


அன்று பண்டிகை நாள் நன்றாக தான் விடிந்தது. கந்தன் சத்தம் போடாத வரையில். தெருவே அவர்கள் வாக்குவாதத்தில் கூடி விட்டது .


கந்தன் வள்ளியம்மாளின் பங்காளி மகன். அவர்களுக்குள் பொதுவாக ஏற்ப்படும் சொத்து பிரிவினை தான் என்றாலும் வள்ளியம்மாளின் பொறுமை முன் அவனின் பாச்சா பலிப்பதில்லை.


ராசம்மா வள்ளியின் அத்தை மகள் என்பதால் அவர்களுக்குள் இணக்கம் இருந்ததையும் கந்தனால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

இது அறியாமல் அவர்களுக்குள் திருமணமும் ஆகி விட்டது.அதற்க்காகவே கிழவியின் பொருட்டு இருவருக்கும் சண்டை வருவது சகஜம் தான்.

இது இப்படி இருக்க, இன்று என்ன புது சண்டை என்று அவர் அவர்கள் வேடிக்கை பார்க்க கூடி விட்டது கூட்டம்!

ராசம்மாளை கண்ட படி ஏசி கொண்டிருந்தான் கந்தன்.


கொம்பை ஊன்றி கொண்டு வள்ளி கிழவி வந்தாள். "ஏலே கந்தா! என்னடா பண்டிக நாள் அதுவுமா அவளை போட்டு கண்ட படி வேஞ்சிகிட்டு இருக்கிறவன்?" என்று சத்தம் போட்டாள்.


"ம்ம்? பின்ன வெய்யாம என்ன கொஞ்சுவாங்களா?

"லே! என்ன கிண்டலா? என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?"


"அதான் எங்களுக்குள்ள பிரச்சனை ன்னு தெரியுது இல்ல? இப்போ எதுக்கு நீ பஞ்சாயதுக்கு வர்றவ..என்று பற்களை நறநறத்துகொண்டே.


"அதுக்கு? தெருவே பாக்க இந்த புள்ளைய எதுக்கு வெஞ்ச?"


"இந்தா கிழவி! தயவு செஞ்சி போய்டு எதோ அது பேசிக்கிட்டு போயிரும். அனாவசியமா அது வாய கிளராத பொறவு நமக்கு தான் கஷ்டம்." என்று ராசம்மா கெஞ்சினாள்.

"ஏன் தெரிஞ்சிக்கட்டு மே! ஏண்டி முட்டா கழுத! எந்த வீட்டுல போய் என்ன வாங்கனும்னு தெரியாது? பேரன் பொறந்துட்டான் விட்டில, நல்ல சங்கதிகள் நடக்க வேண்டாம்? மாங்கோத்து பெரிக்கிற மாங்கோத்து! எவ வீட்டில என்ன எடுக்கிறது ன்னு தெரியாது?"

கிழவிக்கு கோபம் தலைக்கு ஏறியது. தள்ளாத வயதில் தான் செய்த உதவியை மதிக்க வில்லை என்று இல்லை, மாமரத்தை குறை சொன்னானே என்று வந்தது கோபம்.அவனுக்கு சிறு வயது முதல் அவளை பிடிக்காது. அதனால் அந்த மா மரத்தையும் பிடிக்காமல் போயிற்று.

"ஏண்டா என் வீட்டு மரத்துக்கு என்ன குத்தம்? நம்ம வீட்டுக்கு நாம பயன்படுத்தாம வேற யார புழங்க போறா?"

"ஆமாம் போழங்கிட்டாலும்! மலட்டு மரத்து மாவிலை யாருக்கு வேணும்? அதை எல்லாம் தோரணம் கட்டினா வீடு விளங்குமா? எந்தை கை அதை நட்டதோ அந்த மரமும் விளங்கல்ல!" என்று விஷம் பாய்ச்சினான்.

சப்த நாடியும் அடங்கி போனது கிழவிக்கு. இப்படி ஒரு சொல்லை இது வரை வாழ்நாளில் கேட்டது இல்லை.



"அடேய் கந்தா புரிஞ்சிது! நீ ஜாடை பேசினது எனக்கு உறைக்காமல் இல்லை. அது ஆண்டவனை தான் கேக்கணும். எங்க குறை எங்களோட! புருஷன் பொஞ்சாதி நாங்களே அதை பத்தி கவலைப்பட்டதில்ல! நீ எவண்டா அதை குத்தம் சொல்ல? இந்தா மரம் இனி பட்டு போச்சு! ஆனா நான் வெச்ச மரம் பட்டு போனதில்ல! இன்னும் எண்ணி பத்து நாளைக்கி அது பூத்து, காய்க்க தான் போகுது அதையும் பார்க்க தான் போற! அப்போ பேசிக்கிறேன்!"

"ஓஹோன்னான! பார்க்கலாம் கிழவி! பட்ட மரத்து மேல பந்தயம் கட்டுற. நல்லா கேட்டுக்க! இன்னும் பத்து, இல்ல பொழைச்சி போ 15 நாள் கெடு! அதுகுள்ளர அந்த மரம் பூக்கணும்! இல்லேன்னா கோடரி எடுத்துகிட்டு வந்து நானே அத மரத்தடி வேரோட வெட்டி சாச்சிபுடுவேன் ஆமாம்!அப்படி இல்லேன்னா நீ அனுபவிக்கிற சொத்தெல்லாம் எனக்கு தான் சொந்தம் சொல்லிபிட்டேன்.ஊரு ஜனங்க இங்க இருகாங்க அவங்க தான் சாட்சி. இந்தா! இந்த மாங்கோத்தாவது மிஞ்சட்டும்" என்று மாவிலைகளை முகத்தில் விட்டெறிந்தான் கந்தன்.

கிழவி பார்க்க சாதரணமாக தெரிந்தாலும் அவளுக்கு ஏகத்திற்கும் சொத்து இருந்தது. தம்பி மகனாநாலும் அவர்கள் பிள்ளை போல கருதினர் சுந்தரமும் வள்ளியும். ஆனால் ஊதாரியான அவனுக்கு சொத்தினை கொடுத்தால் பாழாகும் என்று எண்ணி சொத்துக்களை அண்ணியின் பராமரிப்பில் உயில் எழுதிவிட்டார் அண்ணனும் கந்தனின் தந்தையும். நீறு பூத்த நெருப்பு போல இருந்த இந்த புகையினை தீயாக எரிய விட்டான் கந்தன்.

கிழவிக்கு இடி விழுந்தால் போல இருந்தது. விசும்பிக்கொண்டே வீட்டிற்கு வந்தாள் வீட்டின் முன்னர் பறந்து வளர்ந்த பசும் தழைகளை பார்த்தாள். கோவென அழ ஆரம்பித்தாள். "என் செல்ல மகளே! ஐயோ! கூசாம உன்ன வெட்டி போடுவேன்னு கொக்கரிக்கிரனே படுபாவி! இன்னும் ஏன் இந்தா மௌனம்? இந்த பாவி என்ன குத்தம் சொன்னாலும் பரவால்லையே,என் புருஷன் வெச்ச மரம் மலட்டு மரம்னு சொன்னானே! இந்த உசுரு நிம்மதியா போக விடுமா? சாமி நான் என்ன பதில் சொல்லுவேன்? என் ஆசை தப்பா? என் பாசம் தப்பா? சொத்து பணம் ரெண்டையும் விட நிஜமானது அன்பும் பாசமும்.இவன என் புள்ளைய போல அன்பு காட்டுறேனே! இந்த பய அத புரிஞ்சிகிரதில்லேயே! என்ன ஏசுரதிலேயே குறியா இருக்கானே!
இருக்கட்டும் அவன் சொன்னதுல என்ன குத்தம் இருக்கு?இந்த மரம் தான் இதுக்கு காரணம்..என்று தள்ளடிக்கொண்டே மா மரத்தின் அருகில் வந்தாள் வள்ளி கிழவி.

"அடியே மரமே! நீ இத்தனையும் பாக்குறியே! இன்னும் கனிய மாட்டேன்னு நிக்கிறியே? உன்னால நான் அவமான பட்டேனே!நீ கனியா இல்ல அந்த கடவுள போல கல்லாப்போனியா? நான் பட்டாலும் என் ராசா உன் மேலே அத்தன ஆசை வெச்சாரு? உன்ன எங்க மக போல பாத்துகிட்டாறு.. அவரு வெச்ச மரம் நீ! அவருக்கு அவமானம் வரலாமா சொல்லு? இனி அவன் கேடு வேச்சிட்டனே பதினஞ்சு நாளாம்.."

"ஐயோ உன்ன வெட்டி போடுவானே! இனி நீ தாண்டி முடிவெடுக்கணும்.நீ காய்ச்சா ஆச்சு..இல்லே இந்த உசுரு போகும் தெரிஞ்சிக்க. ஆ!நீ இருந்தாதானே இந்தா அவமானம்! வேற எவனாவது உன்ன ஏதன செய்யுறதுக்கு முன்னே நானே உன்ன ஒழிச்சிபிடுறேன்!" என்று கையில் இருந்த தடியால் அடிக்க தொடங்கினாள்.

சோமு பதறியபடி ஓடி வந்தான்."கிழவி! இந்தா! என்னாச்சு? என்ன இப்படி பயித்தியம் பிடிச்சா மாதிரி கத்துற?" என்று மாமரத்தை அடித்து கொண்டிருந்த வள்ளியின் கரத்தை பிடித்தான்.

"விடுறா சோமு..இந்தா மரத்த அவன் எதாச்சும் செய்யுறதுக்கு முன்னால நானே இத முரிச்சிபிடுறேன் என்ற தேம்பிக்கொண்டே சொன்னாள் வள்ளி கிழவி.

கிழவியை சமாதானப்படுத்தி திண்ணையில் அமர வைத்தான் சோமு."ஏன் கிழவி! நீயா ஆத்திர படுற? பூக்கிறதும் காய்க்கிறதும் நம்ம கையில இல்லேன்னு சொன்ன நீ இப்போ மரத்த அழிக்கப்பாயுற?" என்று கேட்டான் சோமு.

"சோமு! நாம எதாவது ஒண்ணும் பேரிலே ஆசை வளத்துகிட்டா அதுக்கு கஷ்டம் வரும் போது நம்ம மனசு வலிக்கும். ஒரு உயிரில்லாத பொம்மை உடைஞ்சு போயிட்டா..போனால் போகட்டும் பொம்மை தானே?வேற வாங்கிக்கலாம்ன்னு நமக்கு தெரியும் ஆனா நம்ம குழந்தைக்கு தெரியறது இல்லை. அதோட ஆசை அது கண்ணை மறைச்சி கலங்க வெச்சிடும்."

"ஆசை ஒரு தடவை வர்றது, ஆனா அது ஜன்மத்துக்கும் அழியாதது.ஆனால் அதிலே கஷ்டம், பிரிவு சோகம் தான் அதிகம்.இந்த உசிரு நிலைக்காதுன்னு புத்தி சொன்னாலும், மனசு கேக்குறதில்லை. இந்த மாமரம் உங்க அய்யா வெச்சது, அது முதல் அவரு பொழுதன்னைக்கும் ஏனோ இது பேர்ல கொள்ளை ஆசை வெச்சி இருந்தாரு.அதுனால தான் எனக்கும் இது பேர்ல ரொம்ப ஆசை வந்தது.

அவரு போகும் போது கூட இவ்வளவு மனசு வலிச்சதில்லை. அவன் சொன்ன ஒரு வார்த்தை உங்க அய்யாவயே வெட்டி எரியுராபோல இருக்குடா! மனசு வலிக்கிது டா!" என்று கண்ணீர் பெருக்கினாள் கிழவி.

தன்னை அறியாமல் கலங்கி விட்டான் சோமு. அனாதையான அவன் இது நாள் வரை தன் எஜமாநியாகதான் பார்த்திருக்கிறான் வள்ளி கிழவியை. ஆனால் இன்று இது போல் ஒரு தாய் அவனுக்கு வாய்க்காமல் போனதை எண்ணி நொந்து கண்களில் கண்ணீரை கசிந்ததை துடைக்க மறந்து போனான்!

அந்த நாளும் வந்தது! கந்தன் கோடரி பளிரென மின்ன முண்டாசு கட்டி கொண்டு கூட்டத்தினை கூட்டியே விட்டான்!

"இதோ பாருங்க! நான் சொன்னது போல கெடு முடிஞ்சி போச்சு.இந்த மரத்த வெட்டி போட பஞ்சாயதாறு அனுமதிக்கணுமுங்க". என்றான்.


வள்ளி கிழவி "இப்போ என்ன தான் செய்யுறது? நான் என்ன பாவம் செஞ்சேன்? வயசான காலத்துல எனக்கு இருக்கிற துணை இந்த மரம் தான். அத விட்டுரு அய்யா! உனக்கு புண்ணியமா போவும். பச்சை மரத்த வெட்டாத ராசா!" என்று ஊரே கலங்கும் படி வேண்டினாள்.

"பச்சை மரமா! அது பூத்து கைக்கிற மரத்துக்கு பேரு.ஓதிய மரமும் எதனாச்சும் தரும். ஆனா இது வெட்டி மரம். பட்டமரம் உன்ன மாதிரி ஊற ஏமாத்திகிட்டு இருக்கு. ஏதாவது ஒண்ண ஒழிச்சா தான் சரியா போய்டும்." என்று நாக்கினால் தீயாய் கக்கினான்.

தலையில் இடி விழுந்தால் போல இருந்த வார்த்தைகளை தாங்க முடியவில்லை கிழவிக்கு. வெட்டபட்ட மரம் போல சாய்ந்தாள்.

"அட பாவி! நான் பட்ட மரம் இல்லைடா! என் புள்ள உயிரோட இருந்தா உன் நாக்கு தரையில கிடக்கும்! ஆத்தா மகமாயி! இவன திருத்து.அம்மா நீதான் துணை!" என்று மயங்கி சரிந்தாள் வள்ளி கிழவி.


சோமு வெகுண்டு எழுந்தான் அவனால் பொறுமை காக்க முடியவில்லை. கிழவிக்கு கொடுத்த பொறுமை கடைபிடிக்கும் கொள்கையினை கைவிட்டான். அரிவாளை தூக்கி கொண்டு கந்தன் அதிர அவன் முன்னாள் குதித்தான்."ஏன்டா! கிறுக்கு பயலே! கேக்க ஆளு இல்லேன்னா வானுக்கும் பூமிக்கும் குதிப்பியோ?"


கந்தன் அசரவில்லை "நீ எவண்டா நாயி பேச? வேலைக்கார பயலெல்லாம் பேச உரிமை கிடையாது. போடா அந்தண்டை!"

"லெ!நிறுத்தடா! நான் வேலைக்கார பயதான். ஆனால் அந்த மரத்துக்கு என் பங்குக்கும் உழைச்சிருக்கேன். அது மேல எனக்கும் உரிமை இருக்கு. அது மேல கைய்ய வெச்ச என்ன செய்வேன்னு தெரியாது பாத்துக்க." என்று உறுமினான் சோமு.


"என்னய்யா உங்கள பஞ்சாயத்துக்கு கூப்பிட்ட வாய பாத்துகிட்டு இருகீங்க சொல்லுங்கய்யா?!"என்று அதட்டினான் கந்தன்.


எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என்று இருந்த பஞ்சாயத்தார் குழம்பினார். "கந்தா!இதெல்லாம் நல்லாவா இருக்கு? அதுவும் சோமு யாரு? நம்ம ஊருகாரன். அவன் சொல்லுரதிலேயும் ஞாயம் இருக்கே. என்ன தான் வேலைக்காரன் ஆனாலும் அவன் பங்கு உழைப்பும் இருக்கு. அவனுக்கு பதில் சொல்லுற கடமை இருக்கு."
என்றனர்.


கந்தன் கோடரியை சுழற்றினான். "பதிலா? சொல்லுறேன், இத துண்டு துண்டா வெட்டி விறகுக்கு போட்டு ஒரு பங்கு இவனுக்கு கொடுக்கிறேன்.இதுதான் என் பதில்!' என்று வெறியுடன் மரத்தில் ஓங்கி கோடரியால் ஒரு வெட்டு வெட்டினான்.


வள்ளி கிழவி முன்னே கனவு போல் அவள் கணவன் முகம் தெரிந்தது.ஆனந்தம் மேலிட அவள் நோக்கினாள்."வள்ளி! அடி பைத்தியமே! நான் உன்ன விட்டு போயிருவேன்னு நினைச்சியா? நம்ம குழந்தைய இன்னொருத்தன் தோட விட மாட்டேன்ன்னு சத்தியம் பண்ணி தந்தேனே? அதை எப்படி மறப்பேன்? கவலை படாத ஒண்ணும் ஆகாது.கண்ணை திற!" என்று சொல்லி மறைத்தார்.


"ஆத்தா! என்னைய மன்னிச்சிரு!" என்று ஒரு குரல் கேட்டு விழித்தாள்.
கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. கந்தன் தான் அது! அனால் அது என்ன இடது கண்ணில் பெரிய கட்டு? திரும்பி சோமுவை பார்த்தாள் வள்ளி கிழவி.


சோமு முகத்தில் ஆனந்தம் பெருக கிழவி அருகில் நின்று கொண்டிருந்தான். "ஆத்தா! இங்க பாரு! நம்பவே முடியல்ல! அதிசயத்த பாரேன்! என்று அவள் கையில் கொடுத்தான். ஆமாம் மாங்காய்! மாங்காய்! கிளி மூக்கு மாங்காய்! என் மரத்து மாங்காய்! கிழவியால் நம்ப முடியவில்லை. இளம் சிவப்பும் பச்சை நிறத்துடனும் பால் விட்டு கொண்டிருந்தது அந்த மாங்காய். சோமுவை ஏறிட்டு பார்த்தாள் கிழவி.

கந்தன் கோடரியால் ஒரு அடி கொடுத்ததும்,மரத்தில் இருந்து பெரிய கல் விழுவது போல அவன் கண்களில் எதோ ஒரு பொருள் விழுந்தது. அவன் துடித்து போய் தரையில் விழுந்து புரண்டான். அவனால் பார்க்க முடிய வில்லை எனவும், கண் தீ பிடித்தாற்போல் எரிகிறது என்றும் கதறினான்.அக்கம் பக்கத்தினர் அவனை சூழ்ந்தனர்.

சிறுவன் ஒருவன் மரத்தில் இருந்து மாங்காய்கள் விழுவதாக சொன்னான். எல்லோரும் அதிசயத்துடன் மா மரத்தினை பார்த்தனர். கொத்து கொத்தாக மாங்காய்கள் விழ தொடங்கின. பூக்கள், பிஞ்சுகளுடன் பருமனான கிளி மூக்கு மாங்காய்கள் தரையில் விழுவதை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.


கந்தன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். காயம் எதுவும் இல்லை எனவும் பால் விழுந்ததனால் கண் பார்வை சிறிது காலம் பாதிக்கும் எனவும் மெல்ல சரியாகிவிடும் எனவும் மருத்துவர் சொன்னார் என்று சோமு நடந்ததை விளக்கினான்.

கந்தன் மனம் திருந்தி விட்டான் என்று அவள் காலை பற்றி அழுதான். அவனை தாயின் வாஞ்சையுடன் கட்டி அணைத்தாள் கிழவி. "கந்தா அழாத. இத்தனை நாளா நம்மளை பிடிச்ச கெரகம் விட்டதுன்னு சந்தோசப்படு சோமுவும் நீயும் என் பிள்ளைகள் போல. இனி எப்போதும் ஒத்துமையோட இருங்க. இந்த மாம்பழத்த அம்மணிக்கு கணிக்கையாகுவோம். என்றாள்.அடுத்த பண்டிகையின் பொது ஊரே அன்று அவள் வீட்டு மாவிலை கொத்தினை தான் வாசல் படியில் செருகி இருந்தது!

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...